திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.62 திருவானைக்கா - திருத்தாண்டகம்
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
    எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
    சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
    திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
1
ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
    உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
    நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
    திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
2
ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
    ஒன்றலாத் டதவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுண்
    திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை
    ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
3
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
    நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
    முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
    கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
4
இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
    திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
    காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
    வேதியனே தென்னானைக் காவுள் மேய
அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
5
உரையாரும் புகழானே ஒற்றி யூராய்
    கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
    மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு
    திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6
மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
    மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
    கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
    குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
7
இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே
    எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
    தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
    தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
8
விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
    நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
    என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
    கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
9
கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
    குறட்பூதங் கூத்தாட நீயு மாடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
    மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப்
    பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.63 திருவானைக்கா - திருத்தாண்டகம்
முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை
    மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்
    சார்தற் கரியானைத் தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை
    எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
1
மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை
    வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை
    இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்
    கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
2
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
    முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
    ஓங்காரத் துட்பொருளை உலக மேல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்
    பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
3
காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்
    காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
    தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
    பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
4
பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்
    புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை
    ஏறமரும் பெருமானை இடமா னேந்து
கையானைக் கங்காள வேடத் தானைக்
    கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
5
கலையானைப் பாசுபதப் பாணி யானைக்
    கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்றலையி னுச்சி யானை
    வார்தருபுன் சடையானை மயான மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து
    நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6
ஆதியனை எறிமணியின் ஓசை யானை
    அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்
    சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை
    விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
7
மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை
    மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்
    பூதகணப் படையாளைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை
    ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
8
நசையானை நால்வேதத் தப்பா லானை
    நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை
இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை
    இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்
    மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
9
பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்
    பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்
    தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்
    ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்
    செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com